சிட்னி: ஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தனுஷ்கா குணதிலகாவை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தனுஷ்கா குணதிலகா. இவர் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் போட்டியில் பங்கேற்றார். ஆனால், போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோற்றது. இந்த போட்டிக்கு பின்னர், தனுஷ்கா குணதிலகா சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாருக்காக அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து சிட்னி போலீசார் கூறுகையில், ‘இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா, டேட்டிங் ஆப் மூலம் 29 வயது இளம்பெண்ணுடன் பழகி உள்ளார்.
கடந்த 2ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணை குணதிலகா பலாத்காரம் செய்துள்ளார். தனது அனுமதியின்றி தன்னுடன் அவர் பாலியல் உறவு வைத்து கொண்டதாக சிட்னி போலீசில் அப்பெண் புகார் அளித்தார். அதன் பேரில், குணதிலகா கைது செய்யப்பட்டார்’ என்று தெரிவித்தனர். இதனிடையே, டி20 தொடரில் இருந்து வெளியேறி இலங்கை அணி தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே சொந்த நாடு திரும்பியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.